உள்ளூர் செய்திகள்
கொள்ளை

ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2022-03-09 11:35 GMT   |   Update On 2022-03-09 11:35 GMT
ராஜபாளையம்அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ராஜபாளையம் ஏ.கே. டி.ஆர். தினசரி சந்தையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். 

கடந்த 5-ந்தேதி மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருமங்கலம் எஸ்.பி.நத்தத்திற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து நேற்று மாலை மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. 

பீரோ லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 26 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் மாரியப்பனின் வீட்டில் ஆள்இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாரியப்பனின் வீட்டின் கதவு பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். 

கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆள் இல்லாத வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News