உள்ளூர் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது.
சென்னிமலை:
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் 18 சித்தர்களில் ஒருவரான பின்னாக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த திருத்தலம் ஆகும்.
இங்கு முருகனுக்கு தைப் பூச தேர், பங்குனி உத்திர தேர் என இரண்டு திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப் பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.
கொரோனா நெருக்கடியால் 2020-ம் வருடம் பங்குனி உத்திர திருவிழா முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 2021-ம் வருடம் எளிய முறையில் சகடை தேரில் பங்குனி உத்திர விழா நடந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தான் தேரோட்டம் நடக்கிறது.
இந்த வருட பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 15-ந் தேதி கணபதிஹோமத்துடன் தொடங்குகிறது. 16-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 17-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
18-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும்.
19-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந் தேதி காலை 8 மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமணிகாந்தன், தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.