உள்ளூர் செய்திகள்
பலியான ஆடுகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

Published On 2022-03-09 15:36 IST   |   Update On 2022-03-09 15:36:00 IST
நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நம்பியூர்:

நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

நம்பியூர் அருகே உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

சங்கர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்த பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு ஊருக்குள் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆட்டு பட்டியில் இருந்து ஆடு சத்தம் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

இதையடுத்து பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் ஊருக்குள் வந்து சங்கர் மனைவி தமிழரசி தகவல் தெரிவித்தார். அவர் அக்கம் பக்கத்தினருடன் தோட்டத்தில் உள்ள பட்டிக்கு சென்றார்.

அப்போது பட்டியில் இருந்த 3 ஆடுகள் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் மர்ம விலங்கிடம் தப்பி ஓடிய ஒரு ஆடு கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டை மீட்டனர்.
இதுகுறித்து வரப்பாளையம் போலீசாருக்கும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின்புதான் ஆடுகளை கடித்து கொன்ற விலங்கு எது என்று தெரிய வரும்.

நம்பியூர் பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஊருக்குள் புகுந்து ஒரு சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தையை தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை தப்பி சென்று விட்டது.

இந்த நிலையில் மீண்டும் மர்ம விலங்கு ஆடுகளை அடித்து கொன்றதால் அது சிறுத்தையாக இருக்குமோ என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் வந்து ஆய்வு செய்த பின்பே முழு விபரமும் தெரிய வரும்.

Similar News