உள்ளூர் செய்திகள்
பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது
பெருந்துறையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பவானி ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், அவர், நசியனூரை சேர்ந்த அர்ஜூனன் (20) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அர்ஜூனன் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அர்ஜூனனை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.