உள்ளூர் செய்திகள்
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை முதுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(வயது41). கடந்த 2011&ம் ஆண்டு இவர், ஆண்டிமடம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தற்காலிக கணினி ஆப்ரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த அவரை, கடந்தாண்டு நவம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவி, மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தார். அங்கு அவர், தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்னையை எடுத்து உடலில் ஊற்ற முயன்றார்.
இதை கவனித்த காவல் துறையினர் விரைந்து சென்று தடுத்து, மண்ணெண்னை கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் தர்னாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர் எழுந்துச் சென்றார். இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.