உள்ளூர் செய்திகள்
கைதான ஜெகநாதன்.

மனைவி-மகனை கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது

Published On 2022-03-07 15:07 IST   |   Update On 2022-03-07 15:07:00 IST
பெருந்துறையில் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
பெருந்துறை:

பெருந்துறையில் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

பெருந்துறை கருமாண்டி செல்லி பாளையம், வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி பவித்ரா (24). என்ற மனைவியும், சுதர்சன் (6) மகனும், தர்ஷினி (1)என்ற மகளும் உள்ளனர். ஜெகநாதன் வீட்டிற்கு சரியாக வராமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார்.

இதனால் பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெற்றோரின் வீட்டின் அருகே தனியாக குடியிருந்து வருகிறார்.  மேலும் ஜெகநாதன் அடிக்கடி வேறு ஒரு பெண்ணுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். 

இது தொடர்பாக பவித்ராவுக்கும், ஜெகநாத னுக்கு இடையே  தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் தகராறு ஏற்பட்ட போது ஜெகநாதன் மகன் சுதர்சனின் கழுத்தில் காலை வைத்து கொல்ல முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட பவித்ரா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவனை காப்பாற் றினர்.  பின்னர் அவர்கள் ஜெகநாதனை சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியேற்றினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வீட்டிற்கு வந்த ஜெகநாதன் மனைவியை திட்டி சண்டை போட்டுள்ளார். பின்னர் துப்பட்டாவை எடுத்து மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

பவித்ரா சத்தம் போடவே அவரது பெற்றோர் விரைந்து வந்து பார்த்தபோது பவித்ரா மயங்கி கிடந்தார். ஜெகநாதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

உடனடியாக பவித்ராவை அவரது பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை தேடி வந்தனர். 

இந்த நிலையில் பெருந்துறை போலீசாருக்கு ஜெகநாதன் திருப்பூர் அடுத்துள்ள இடுவாய் பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகநாதனை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News