உள்ளூர் செய்திகள்
4 மண்டல தலைவர்கள் பதவியை கைப்பற்ற தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கடும் போட்டி
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் பதவியை கைப்பற்ற தி.மு.க கூட்டணிக் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் பதவியை கைப்பற்ற தி.மு.க கூட்டணிக் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தி.மு.க நேரடியாக 43 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - 3, ம.தி.மு.க - 1, கொ.ம.தே.க - 1 என மொத்தம் 48 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து மண்டல தலைவர்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்த மண்டலத் தலைவர் பதவியைப் பிடிக்க தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. மேயர் துணை மேயர் அடுத்ததாக மண்டல தலைவர் பதவி கவுரவமாக பார்க்கப்படுவதால் அந்தப் பதவியை பிடிக்க திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
தி.மு.க.வில் பொறுத்த வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்க ளில் கட்சியின் அனுபவமிக்க தலைவர்கள் உள்ளனர். அவர்கள் மண்டல தலைவர் பதவியை பிடிக்க இப்போதே மேலிடத்தில் சொல்லி காய் நகர்த்தி வருகின்றனர்.
இதேப்போல் காங்கிரசை பொறுத்தவரை அவர்கள் துணை மேயர் பதவி எதிர்பார்த்தனர்.
அது கிடைக்காததால் கண்டிப்பாக நான்கு மண்டலங்களில் அவர் களுக்கு ஒரு மண்டல தலைவர் பதவி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் தற்போது மூன்று பேர் கவுன்சிலராக உள்ளனர்.
அதில் ஒருவருக்கு மண்டலத் தலைவர் பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இதேபோல் மற்ற கூட்டணி கட்சிகளும் மண்டல் தலைவர் பதவியைப் பெற்று விட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். கவுன்சிலர்களின் முதல் கூட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.
அதில் மண்டல தலைவர்கள் பதிவு குறித்து விவாதிக்கப்பட்டு யார் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.