உள்ளூர் செய்திகள்
கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு:
ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம் பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்தப் நுழைவு பாலத்தின் வழியாக தினமும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என நூற்றுகணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இந்தவழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரோட்டின் இருபு-றமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு லாரியை பொக்லைன் மூலம் தள்ளியவாறு கொல்லம்பாளையம் பள்ளி அருகே கொண்டு செல்லப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் மெதுவாக இயக்கப்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இந்த ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சில நேரங்களில் சரக்கு லாரிகள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த வழியாகத்தான் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளும் அதிகளவில் சென்று வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
இப்படி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கிறது.
எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வசதி படுத்தி கொடுக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.