உள்ளூர் செய்திகள்
பாலத்தில் இருந்து பவானி ஆற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
பவானிசாகரில் குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி பவானி ஆற்றில் விழுந்த முதியவர் பலியானார்.
பு.புளியம்பட்டி:
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் நடராஜன் (60) தொழிலாளி. இவர் தற்போது பவானிசாகர் புதூர் தொட்டம்பாளையம் வெளியம்பாளையத்தில் வசித்து வந்தார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இவர் பவானிசாகர் அணையின் முன்பு உள்ள பழைய பாலத்தில் நடைமேடையில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது குடிபோதையில் இருந்த நடராஜன் திடீரென பாலத்தில் இருந்து தவறி பவானி ஆற்றில் விழுந்தார். தற்போது ஆற்றில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால், குடிநீர் தேவை மற்றும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது.
இதனால் பவானி ஆற்றில் விழுந்த நடராஜன் தண்ணீயில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றி தெரியவந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.