உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை உற்பத்தி ஆர்டர்

Published On 2022-03-04 15:09 IST   |   Update On 2022-03-04 15:09:00 IST
3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:

3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளிய மக்களுக்கு வினியோகிக்கும் வகையில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. 

அதுபோல அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி போன்றவைகளில் படிக்கும் மாணவ& மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன்படி கடந்த 2021&22&ம் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் ஒரு கோடியே 82 லட்சத்து 21 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 81 லட்சத்து, 89 ஆயிரம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தற்போது ஒரு கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்து சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 

அங்கிருந்து பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பொறுத்தவரை 45 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 500 விசைத் தறிகளில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடந்தது. இதன் மூலம் 3,700 நெசவாளர்கள் நேரடியாக பயனடைந்தனர்.

நடப்பாண்டு இலவச வேட்டி, சேலை திட்ட உற்பத்தி தொடக்கத்தின் போது நூல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், உரிய நேரத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி, தற்போது அப்பணி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022&23&ம் கல்வி ஆண்டுக்காக பள்ளி சீருடை உற்பத்தி தொடங்க உள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் 98 லட்சம் மீட்டர் டிரில் துணியும், 73 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணியும், 2.13 கோடி மீட்டர் சர்ட்டிங் துணிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மொத்தம், 3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு சீருடை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது. விரைவில் பள்ளி சீருடை உற்பத்தி பணி தொடங்கும். 

இதன் மூலம், விசைத்தறியாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் ஈரோடு விசைத் தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News