உள்ளூர் செய்திகள்
கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அரசு அதிகாரி கைது

Published On 2022-03-04 12:30 IST   |   Update On 2022-03-04 12:30:00 IST
வேலை கேட்டு விண்ணப்பம் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் மேலாளராக சீனிவாசன் (வயது 50) என்பவர் உள்ளார். தற்போது கிட்டங்கி அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

அதன்படி சம்பவத்தன்று அருப்புகோட்டையை சேர்ந்த 22 வயதான திருமணமான இளம்பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய வந்தார். அவர் மேலாளர் சீனிவாசனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்தார். அப்போது அவர் அந்த பெண்ணை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

வேலை தொடர்பான விவரத்தை கேட்பதற்காகவே தன்னை அழைப்பதாக நினைத்து இளம்பெண், மேலாளரின் அறைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் மேலாளரை தள்ளி விட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலாளர் சீனிவாசன் இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் உனது விண்ணப்பத்தை நிராகரித்து விடுவேன் என கூறியதாக தெரிகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இளம்பெண் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அருப்புகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் சீனிவாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News