உள்ளூர் செய்திகள்
மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்தும் விலை சரிவு
தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
ஈரோடு:
தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. டிசம்பர், முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை அறுவடை சீசனாகும்.
மரவள்ளி கிழங்கை மொத்தமாக சேகோ ஆலைகள் வாங்கி செல்வது வாடிக்கை. தற்போது அறுவடை முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், வரத்து இருந்தும் விலை சரிந்து காணப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
கடந்த நவம்பர், மாதம் ஒரு டன் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. மரவள்ளி பாயிண்ட் ரூ.300 என்ற விலையில் விற்பனையானது.
கொரோ னாவுக்கான ஊரடங்கு கட்டுப்பாடு வந்ததும் விலை குறைந்து தற்போது ஒரு டன் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. பாயிண்ட் ரூ.225 என்ற விலையில் கேட்கின்றனர்.
அதற்கேற்ப 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,800 வரை விற்பனையாகிறது. ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.2,400 முதல் ரூ.2,700 வரை விற்பனையாகிறது.
மரவள்ளிக்கும், அதனை சார்ந்த உபபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதனை மாற்ற, மரவள்ளி, அதனை சார்ந்த உபபொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஸ்டார்ச் மாவுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி-ஐ 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். ஜி.எஸ்.டி. அதிகமாக உள்ளதால், ஜவுளி சார்ந்த பல தொழில் செய்வோர் ஸ்டார்ச் மாவு வாங்க தயங்குகின்றனர்.
கடந்த காலங்கள் போல ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.