உள்ளூர் செய்திகள்
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் சிறுத்தைக்கு பவானிசாகர் வன உயிரின ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
2 பின்னங்கால்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த 5 வயது ஆண் சிறுத்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான மான், சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடக்க முடியாத நிலையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதாக கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பவானிசாகர் வனத்துறை கால்நடை டாக்டர்.சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு சென்று அந்த சிறுத்தையை கண்டுப்பிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் சிறுத்தையை கூண்டில் ஏற்றி பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன உயிரின ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பின்னங்கால்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த 5 வயது ஆண் சிறுத்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
அந்த சிறுத்தைக்கு மாட்டு இறைச்சி, ஈரல், ஆட்டு இறைச்சி, கோழி ஆகியவை உணவாக கொடுக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி மூலம் மருந்துகள் செலுத்திப்படுகிறது.
சிறுத்தை குணமாகி எழுந்து கால்களை ஊன்றி நடமாடும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்.சதாசிவம் தெரிவித்தார். மருத்துவ உதவியாளர்கள் வீரக்குமார், செந்தில்குமார், கேசவராஜ் ஆகியோர் உடனிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.