உள்ளூர் செய்திகள்
அந்தியூர் அருகே விபத்தில் 2 பேர் பலி
அந்தியூர் அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன் பாளையத்தைச்சேர்ந்தவர் ராஜகோபால்(41) டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவர் தனது நண்பர் பருவாச்சி அண்ணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜகோபால் ஓட்டிச் சென்றார்.
அண்ணாமடுவு அருகே உள்ள கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 2 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து இவர்கள் மோதினர்.
இந்த விபத்தில், தலையில் பலத்த அடிபட்டு ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இரட்டைக்கரடு கண்ணாடி பாளையம் அருகே உள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த சங்கர் (21), சரவணன் (16), சுதாகர் (31), ஆனந்த் (20), மோகன் (22), மணிகண்டன் (20), பழனிச்சாமி (50) ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஆனந்த், மணிகண்டன், மோகன் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.