உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சியில் துணை மேயர் பதவியை குறி வைக்கும் காங்கிரஸ்
ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவியை கைப்பற்ற, ராகுலை சந்தித்து பேச காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளில் போட்டியிட்டு, 1 வார்டை கைப்பற்றி உள்ளது. இந்தநிலையில், துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தருமாறு, முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருவதாக செய்திகள் பர பரப்பாக அடிபடுகின்றன.
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலரும், தற்போது 33-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளவருமான இந்தி ராணிக்கு வழங்கவேண்டும் என்று முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.கோபிநாத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் , நாளை (28-ந்தேதி) சென்னைக்கு வரும் ராகுல் காந்தியை, கோபிநாத் தலைமையில் நேரில் சந்தித்து, துணை மேயர் கோரிக்கையை ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்ல கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பதவியை கேட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதால், துணை மேயர் கனவில் உள்ள தி.மு.க.கவுன்சிலர்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் தட்டிச்செல்லுமா அல்லது தி.மு.க.வே அந்த பதவியில் அமருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.