உள்ளூர் செய்திகள்
கர்ஷினி

உக்ரைனில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிபடும் தமிழக மருத்துவ மாணவர்கள்

Published On 2022-02-26 15:02 IST   |   Update On 2022-02-26 15:02:00 IST
உக்ரைனில் 3 மாதங்களாக போர் சூழல் நிலவி வருவதால் தமிழக மருத்துவ மாணவர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுவதாக ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி கூறி உள்ளார்.
ஈரோடு:

உக்ரைனில் 3 மாதங்களாக போர் சூழல் நிலவி வருவதால் தமிழக மருத்துவ மாணவர்கள்  உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுவதாக ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி கூறி உள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது இன்று 3&வது நாளாக போர் தொடுத்து வருகிறது.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் தலைநகர் கிவ்வில் படித்து வருகிறார்கள். 

இதில் ஒரு சில மாணவர்கள் இந்தியா திரும்பி விட்டனர். பெரும்பாலும் மாணவ& மாணவிகள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு  மூலப்பாளையம் காமராஜர் வீதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகள் கர்ஷினி. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் தலைநகரில் உள்ள போகோமோலக்ஸ் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவ படிப்பில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் ஏற்பட்டு உள்ள போர் காரணமாக இந்தியாவை சேர்ந்த மருத்துவம் படிக்க சென்ற ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களை இந்திய தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ஷினி 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு திரும்பி உள்ளார். 
உக்ரைனில் உள்ள நிலைமை குறித்து மாணவி கர்ஷினி கூறியதாவது:-

உக்ரைனில் கடந்த 3 மாதங்களாகவே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருந்த உக்ரைன் தலைநகரில் எந்த பிரச்சி னையும் அதிகமாக இல்லை. எல்லை பகுதியில் தான் போருக்கான பிரச்சினை இருந்தது. இருந்தாலும் எனது பெற்றோர்கள் பயந்து ஈரோடுக்கு திரும்பி வர சொன்னார்கள். 
அப்போது ஊருக்கு திரும்பி வர விமான டிக்கெட்கள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்தாலும் 3 மடங்கு விலை ஏற்றத்துடன் இருந்தது. இருந்தாலும் நான் விமான டிக்கெட் எடுத்து கொண்டேன்.விமான டிக்கெட் உயர்வு காரணமாக அதிக அளவில் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர்.  

இந்திய தூதரகம் தங்களை பாதுகாத்து பத்திரமாக திரும்ப அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் இருந்து வருகிறார்கள். மேலும் என்னுடன் படிக்கும் நண்பர்கள் 24&ந் தேதிக்கு மேல் தான்  விமான டிக்கெட்கள் புக் செய்து இருந்த நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் திரும்பி வர இயலவில்லை. இதனால் அவர்கள் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு, தண்ணீர் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக எனது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகள் அருகில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.  இந்திய தூதரகம் எல்லை பகுதிகளில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும் என்று கூறி உள்ளது.

ஆனால் எல்லை பகுதிகளுக்கு செல்ல சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் பாதுகாப்பாக செல்ல முடியாது. 
எனவே எனது நண்பர்களை எல்லை பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்புடன் கூடிய வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தங்கி உள்ளனர். 
இந்தியாவிலிருந்து அதிக அளவு உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்க செல்ல காரணம் இந்தியாவை விட அங்கு மருத்துவம் படிக்க ஆகும் செலவு மிக குறைவு உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தான் அதிக அளவில் இந்தியர்கள் மாணவர்கள் உள்ளார்கள். எனவே அங்கு சிக்கி தவித்து வரும் எனது நண்பர்களை மத்திய, மாநில அரசுகள் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News