உள்ளூர் செய்திகள்
கைது

விருதுநகர் அருகே 204 கிலோ கஞ்சா பறிமுதல்- காரில் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-02-26 09:45 IST   |   Update On 2022-02-26 09:45:00 IST
பட்டாசு கடைக்குள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தனியார் கல்லூரி அருகே நின்றபோது வேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர்.

காருக்குள் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். ஆனால் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 5 பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஆமத்தூர் அருகே உள்ள கவலூர் கிராமத்தில் ஒரு பட்டாசு கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். பட்டாசு கடைக்குள் 89 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். மொத்தத்தில் 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காரில் வந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சிவசாமி (வயது 32), சதீஷ்பாண்டி (22) என்பதும், இவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. 2 பேரும் திருத்தங்கல்லை சேர்ந்த ஜோதிராஜா என்பவருடைய பட்டாசு கடையை லீசுக்கு எடுத்து அங்கு கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

கைதான 2 பேரும் மதுரைக்கு கடத்தி சென்று கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் கவலூரில் இருந்து விருதுநகர் வழியாக நேரடியாக மதுரை செல்லாமல் இவர்கள் கிராம பகுதி வழியாக சுற்றி செல்வதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கடையில் பதுக்கி வைத்து 2 கிலோ பாக்கெட்டுகளாக கஞ்சா இவர்கள் கொண்டு வருவதால் பல்வேறு பகுதிகளுக்கும் அதனை சப்ளை செய்து வருகிறார்களா? அல்லது போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நேர் வழியில் செல்லாமல் கிராமங்கள் வழியாக செல்கின்றனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News