உள்ளூர் செய்திகள்
மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வத்திராயிருப்பு:
மாசி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் பக்தர்கள் காலை 7 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு விடிய, விடிய இரவு முழுவதும் 4 கால சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் விதி முறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.