உள்ளூர் செய்திகள்
மரணம்

ஈரோடு கருங்கல்பாளளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2022-02-24 10:37 IST   |   Update On 2022-02-24 10:39:00 IST
ஈரோடு கருங்கல்பாளளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு, வீரப்பன் சத்திரம் கங்கை வீதியை சேர்ந்தவர் அன்பரசு. கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதாவள்ளி. இவர்களது மகன் ஹரிஷ் குமார் (வயது 13). ஈரோட்டில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வைரபாளையம் குப்பை கிடங்கு அருகே உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு ஹரிஷ் குமார் நண்பர்களுடன் குளிக்க சென்றார். ஹரிஷ்குமாருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

நண்பர்களுடன் உற்சாக மிகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது ஹரிஷ்குமார் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.

இதைக் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். அதற்குள் மாணவன் நீரில் மூழ்கி விட்டான். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர்.

பின்னர் சிறிது நேரத்தில் மாணவனின் உடலை மீட்டனர். ஹரிஷ் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News