உள்ளூர் செய்திகள்
விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
காலை கோவிந்தராஜ் வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் வெளியே புறப்பட்டார். மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு வாட்டர் சர்வீஸ் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென மனநலம் பாதித்த ஒருவர் ரோட்டை கடக்கமுயன்றார்.
அப்போது கோவிந்தராஜ் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளின் வேகத்தை திடீரென கட்டுப்படுத்த முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் கீழே விழுந்தார்.
அவரது மார்பு பகுதியில் பலத்த அடி விழுந்தது. இருப்பினும் சுதாரித்து எழுந்த கோவிந்தராஜ் உடனே தனது சகோதரர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் கோவிந்தராஜை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அதுவரை இயல்பானநிலையில் இருந்த கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அவரது குடும்பத் தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.