உள்ளூர் செய்திகள்
வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி
சூரம்பட்டியில் வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சூரம்பட்டியில் வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சென்னிமலை ரோடு, மணல்மேடு முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்தவர் முத்தாயம்மாள் (வயது 80). இவர் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது உறவினர் மூதாட்டி முத்தாயம்மாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு கட்டிலில் மூதாட்டி முத்தாயம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் சூரம்பட்டி போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர்.
மூதாட்டி உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த அறிகுறி காணப்பட்டது.
போலீசார் விசாரணையில் மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப் பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை.
இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.