உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

கூலித்தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2022-02-21 16:23 IST   |   Update On 2022-02-21 16:23:00 IST
ராஜபாளையத்தில் கூலித்தொழிலாளியை சரமாரி அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார்(வயது55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு மகள் மதிஅனிதாவுடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு அதே தெருவை சேர்ந்த இசக்கிராஜா என்பவர் கையில் வீச்சரிவாளுடன் வந்து பிள்ளையாரின் பக்கத்துவீட்டு பெண்ணான அமுதா என்பவரிடம், அவரது கணவரை எங்கே என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பிள்ளையார் பெண்ணிடம் ஏன் தகராறு செய்கிறாய் என்று  கேட்டு இசக்கிராஜாவை  அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இசக்கிராஜா, தான் வைத்திருந்த அரிவாளால் பிள்ளையாரை சரமாரியாக வெட்டினார்.

இதனை தடுத்த அவரது மகள் மதிஅனிதா மற்றும் அந்த வழியாக சென்ற அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

அரிவாளால் வெட்டப்பட்டதில் கழுத்து, தலை, கை, மார்பு என 7 இடங்களில்  பிள்ளையாருக்கு வெட்டு விழுந்தது. அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து பிள்ளையார் கொடுத்த புகாரின்பேரில்  ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இசக்கிராஜாவை கைது செய்தனர்.

Similar News