உள்ளூர் செய்திகள்
தேர்தல்

வாக்களிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரி

Published On 2022-02-19 15:58 IST   |   Update On 2022-02-19 15:58:00 IST
பட்டியலில் பெயர் இல்லை என கூறி வாக்களிக்க வந்தவர்களை அதிகாரி திருப்பி அனுப்பினார்.
விருதுநகர்

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் 5&வது வார்டுக்கான வாக்குச்சாவடி விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு இன்று காலை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். அவர்கள் பூத் சிலிப்பை கொடுத்தபோது அங்கிருந்த அதிகாரி உங்களுக்கு இங்கு வாக்கு இல்லை என திருப்பி அனுப்பினார். இதனால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு எந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என கேட்டபோது சரியான பதில் இல்லை.

இதேபோல் பல வாக்காளர்களையும் அதிகாரி திருப்பி அனுப்பியபோது, அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் இவர்களுக்கு இங்குதான் வாக்கு உள்ளது என கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது தேர்தல் அதிகாரி வைத்திருந்தது பழைய வாக்காளர் பட்டியல் என்பதும் தற்போது புதிய வாக்காளர் பட்டியல் அமலில் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்த அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு புதிய வாக்காளர் பட்டியல்படி வாக்காளர்கள் வாக் களித்து சென்றனர்.

Similar News