சிவகாசியில் 900 பைகளில் வைத்திருந்த 4.5 டன் அரிசி பறிமுதல்
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்து விட்டது. நாளை (19-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் போன்றவை வழங்கப்படுகிறதா என்பதை தேர்தல் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரிசி பைகளுடன் மினி வேன் நிற்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று வேனில் இருந்த அரிசி பைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அந்த வேனில் 5 கிலோ அரிசி பை 900 எண்ணிக்கையில் இருந்தது.
இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி ஜெய பாண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து அரிசியை பார்வையிட்டார். அப்போது அது ரேஷன் அரிசி இல்லை என்றும் பொன்னி அரிசி என்றும் தெரியவந்தது.
பின்னர் அந்த அரிசி பைகள் திருத்தங்கல் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அரிசி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருத்தங்கலில் உள்ள ஒரு கடைக்கு அந்த அரிசி கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு அரிசி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த அரிசி ஒதுக்கப்பட்டிருந்த தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக உணவு பொருள் தடுப்பு கடத்தல் பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.