உள்ளூர் செய்திகள்
குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் குளத்துப்பாசன விவசாயத்தில், நில உழவுப்பணியிலிருந்து அறுவடை வரையிலான பணிகளை எந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில் ‘வேளாண்மை எந்திரமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் உழுவை எந்திரம் 8 எண்களும், மண் தள்ளும் எந்திரம் 2 எண்களும், ஜே.சி.பி. எந்திரம் 2 எண்களும், பொக்லைன் எந்திரம் 1 எண்ணும், தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 எண்ணும் அரசு நிர்ணயம் செய்த குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
உழுவை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.400க்கும், மண் தள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.970க்கும், ஜே.சி.பி. எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.760க்கும், பொக்லைன் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1660க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.650க்கும் (எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவு உட்பட) விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்ப கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.400- என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நேரடியாக உழவன் செயலி மற்றும் வாடகை செயலியினை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகையினை முன்பணமாக அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு வங்கி அட்டை பரிவர்த்தனை மூலம் செலுத்தி பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளரையும், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக் கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளரையும் தொடர்பு கொண்டு பயன டையலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.