உள்ளூர் செய்திகள்
செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல்
திருக்கோவிலூர் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கண்டாச்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றது எனக் கூறி போலீசார் பஸ் நிலையம் அருகில் ஆட்டோ நிறுத்த கூடாது என கூறியிருக்கின்றனர்.
ஆத்திரமடைந்த செந்தில்குமார் கண்டாச்சிபுரம் கடைவீதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மீது ஏறினார். அப்போது ஆட்டோவை பஸ் நிலையம் அருகில் நிரந்தரமாக நிறுத்தி தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்.
தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று செல்போன் கோபுரம் மீது ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை சமாதானபடுத்தி கீழே இறக்கினர். இந்த சம்பவம் கண்டாச்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.