உள்ளூர் செய்திகள்
கிழக்கு கடற்கரை சாலை

கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் தொய்வு

Published On 2022-02-13 11:07 GMT   |   Update On 2022-02-13 11:07 GMT
ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
கீழக்கரை

கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலை போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளாததால் ராமநாதபுரம்-கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்,  தேவிபட்டினம்,  ஏர்வாடி, உத்தர கோசமங்கை, திருப்புல்லாணி,   சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் ஏராளமான  பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட போலீஸ் பிரிவு தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் குடிபோதையில் வாகனம்  ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது எவ்வித தடையும் இல்லாமல்  நடைபெறுகிறது.

ராமநாதபுரம் தனியார் பள்ளிகளுக்கு மாத கட்டண அடிப்படையில் கீழக்கரையில் இருந்து சட்ட விரோதமாக வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். பள்ளி வாகனங்களுக்கு செலுத்தப்படும் தொகையை விட குறைவாக இருப்பதால் பெற்றோர்களும் பாதுகாப்பை பற்றி யோசிக்காமல் குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். 

நாள்தோறும் இயக்கப்படும் இந்த வாகனங்களை கண்காணிக்க வேண்டிய போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இரவில் நடந்து செல்பவர் மீதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீதும் வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி தப்பி செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதனால் இந்த பகுதியில் மனித  உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கீழக்கரையில் அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதும் தொடர்ந்து வருகிறது. ஏராளமானோர் வாகன உரிமம் இல்லாத நிலையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

கண்துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தி இரண்டொரு வழக்குப்பதிவு செய்து ÔசாதனைÕ செய்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பை பலப்படுத்த  போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News