உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

மாமியாரால் தீவைக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published On 2022-02-12 09:18 IST   |   Update On 2022-02-12 09:18:00 IST
சிவகாசி அருகே மாமியாரால் தீ வைக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி:

விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்தீசுவரி (வயது 20). இவருக்கும் சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஜோதிமணி சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தாயார் சின்னத்தாய்.

ஜோதிமணி ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். இந்தநிலையில் கார்த்தீசுவரியை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.

கார்த்தீசுவரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கடந்த 5-ந் தேதி, கார்த்தீசுவரி பலத்த தீக்காயத்துடன் சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சையில் இருந்த போது, கார்த்தீசுவரி சிவகாசி மாஜிஸ்திரேட்டிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் கார்த்தீசுவரியின் மாமியார் சின்னத்தாயை கைது செய்தனர். கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகள் மீது அவர் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொடூர செயலை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கார்த்தீசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News