உள்ளூர் செய்திகள்
ஜானகிராமன்

தற்கொலை செய்த அ.தி.மு.க. வேட்பாளரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு

Published On 2022-02-11 15:53 IST   |   Update On 2022-02-11 15:53:00 IST
காஞ்சிபுரத்தில் தற்கொலை செய்த அ.தி.மு.க. வேட்பாளரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் இவரது மகன் ஜானகிராமன் (வயது 36).

அ.தி.மு.க சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் உள்ள அறையில் ஜானகிராமன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலைக்கு எதிர்கட்சியினர் மிரட்டலே காரணம் என்று கூறி நேற்று போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஜானகி ராமனின் தந்தையும், தனது மகனை மாற்று கட்சியினர் மிரட்டி வந்ததாகவும், இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து ஜானகிராமன் பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் எதிர்கட்சியினர் மிரட்டலால் அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரை மிரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்பாளர் ஜானகிராமன் இறந்ததையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News