உள்ளூர் செய்திகள்
யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மேலும் ஒருவர் சிக்கினார்
அஞ்செட்டி அருகே யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் கடந்த 2-ந் தேதி 16 முதல் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானையின் லையில் உலோக குண்டு ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அந்த யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து யானையின் உடலில் இருந்த 2 தந்தங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
தொடர்ந்து யானையை கொன்ற நபர்களை பிடிக்க வனத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் விசாரணையில் அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தபன்பப்ளளியை சேர்ந்த முத்து (வயது 35), ஏழுமலையான்தொட்டி காளியப்பன் (28) ஆகியோர் யானையை சுட்டு கொன்றது தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் முயல் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் சென்றதும், அப்போது அவ்வழியாக துரத்திய யானையிடம் இருந்து தப்பித்து செல்வதற்காக யானையை நாட்டுத்துப்பாக்கி மூலம் சுட்டதும் தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரான பாண்டுரெங்கன்தொட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் சேட்டு என்கிற மாதப்பா (25) என் பவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதையடுத்து கைதான அவர்கள் 3 பேரையும் ஓசூர் சிறையில் அடைத்தனர்.