உள்ளூர் செய்திகள்
.

காரில் கஞ்சா கடத்திய பெண் சிறையில் அடைப்பு

Published On 2022-02-06 15:31 IST   |   Update On 2022-02-06 15:31:00 IST
உத்தனப்பள்ளி அருகே ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை காரில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களுடன் பெண் கைது செய்யப்பட்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதியில் எங்கும் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். 

அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மேற்பார்வையில், ராயக்கோட்டை இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி, சப்& இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், கார்த்திகேயன், சரவணன், அமுதா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி துப்புகானப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரின் பின்புறத்தில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் தீர்த்தத்தைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, செல்போன் மற்றும் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த கஞ்சாவை அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் பகுதியில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கைதான முனியம்மாளை தேன்கனிக் கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News