உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ். சங்கீதா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Published On 2022-02-06 14:48 IST   |   Update On 2022-02-06 14:48:00 IST
திருவண்ணாமலை நகராட்சியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:

தமிழகம்  முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

மாநில தேர்தல் ஆணையத்தால் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளராக எம்.எஸ். சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 39-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ்.சங்கீதா நேரில் சென்று பார்வையிட்டு நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, வட்டார தேர்தல் பார்வையாளர் சந்திரா ஆகியோரிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

தபால் வாக்கு, வாக்குசாவடி  மையம்  அமைப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். தேர்தல்  பணியில்  ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் எத்தனை வாக்குசாடிகள் உள்ளன? பதற்றமானவை எத்தனை? என்று கேட்டறிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், நகராட்சியில்  144  வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீபிரகாஷ், தேர்தல் உதவியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News