உள்ளூர் செய்திகள்
2-வது திருமணம் நடைபெறுவதாக நினைத்து கிரக பிரவேச வீட்டுக்குள் அடிதடி தாக்குதல்
தேன்னிக்கோட்டை அருகே கிரக பிரவேச வீட்டில் 2-வது திருமணம் நடைபெறுவதாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அந்தேவணப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் பெங்களூரு ஜீடிமரா பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ஷில்பா (24) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் தருண் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால் ஷில்பா பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அதேபோல. சித்தராஜூம் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சித்தராஜ் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் சித்தராஜின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே சித்தராஜிக்கு 2-வது திருமணம் நடை பெறுவதாக ஷில்பாவின் குடும்பத்தினருக்கு யாரோ தவறான தகவலை கிளப்பி விட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷில்பா மற்றும் பெற்றோர் சித்தராஜிக்கு 2-வது திருமணம் நடைபெறுவதாக நினைத்து ஒரு வேனில் பெங்களூருவில் இருந்து அவசரமாக புறப்பட்டு வந்தனர்.
அப்போது சித்தராஜின் வீட்டு முன்பு உறவினர்கள் பட்டு புடவையும், பட்டு வேட்டியுடன் இருந்ததால் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இதையடுத்து சித்தராஜின் மனைவி ஷில்பா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கிரகப்பிரவேச வீட்டிற்குள் நுழைந்து உருட்டுக்கட்டைகளை கொண்டு அங்கிருந்தவர்களை தாக்கினர். மேலும் புதுவீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளையும், நாற்காலிகள், சாப்பாடு பாத்திரங்களையும், அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சித்தராஜின் உறவினர்களிடமும் கடும் தகராறில் ஈடுபட்டு அவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதில் சித்தராஜ் மற்றும் அவரது தம்பி ரகு (32) மற்றும் அண்ணி கவிதா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஷில்பா குடும்பத்தினர், வேனில் பெங்களுருக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த சித்தராஜ் உள்பட 7 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.