உள்ளூர் செய்திகள்
2 ஆண்டாக மகனை தேடி அலையும் தாய்
புதுவையில் 2 ஆண்டாக தனது மகனை மூதாட்டி அலைந்து வருகிறார்
புதுச்சேரி:
தூத்துக்குடியை சேர்ந்த குருசாமி-பேச்சியம்மாள் தம்பதியின் மகன் ரவி(38).
இவர் கடந்த 2019-ம் ஆண்டு புதுவைக்கு வந்த போது மாயமானார். இவர் புதுவையில் விபத்தில் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக பேச்சியம் மாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேச்சியம்மாள் புதுவைக்கு வந்து விசாரித்தார். ஆனால் எந்த மருத்துவமனையிலும் ரவி இல்லை. போலீசில் புகார் அளித்தும் ரவியை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து 2019 முதல் புதுவைக்கு 21 முறை பேச்சியம்மாள் வந்துள்ளார். போலீஸ் நிலையம், மருத்துவமனை, நகரப்பகுதி முழுவதும் மகனை தேடுவதும் பின்னர் தன் ஊருக்கு செல்வதுமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பேச்சியம்மாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளிக்க இன்று சட்டசபைக்கு வந்தார். அவர் கூறும்போது, எனது மகனை கண்டுபிடிக்க வேண்டும் என 21 முறை புதுவைக்கு வந்துள்ளேன். இதுவரை ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். என் மகன் எங்கே உள்ளான்? என்றே தெரியவில்லை என்றார்.
அவர் தனது மகனின் போட்டோ, கடைசியாக அவரை தொடர்புகொண்டு தொலைபேசி எண்கள் ஆகியவற்றுடன் வந்திருந்தார். தனது மகனை புதுவை முதல்-அமைச்சர் கண்டுபிடித்து தர வேண்டும் என கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது.