உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர் கடமையை மீறியுள்ளார் நாராயணசாமி கண்டனம்
நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக கவர்னர் கடமையை மீறியுள்ளார் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு விலக்குக்கோரிய மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாதது தவறு. தமிழக கவர்னர் கடமையை மீறியுள்ளார்.
மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் உள்ளதாக புதுவை கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். ஆனால், மாநிலங்களை பொருத்தவரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்கலாமே தவிர திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜெண்டுகளாகவும் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.