உள்ளூர் செய்திகள்
வகுப்பறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள்- மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.

அரிசி குடோனாக மாறிய வகுப்பறைகள்- மரத்தடியில் அமர்ந்து படித்த மாணவர்கள்

Published On 2022-02-05 08:56 IST   |   Update On 2022-02-05 08:56:00 IST
காரைக்கால் பகுதியில் அரிசி குடோனாக வகுப்பறைகள் மாறியதால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்தனர்.
கோட்டுச்சேரி:

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாணவர்கைள வெப்ப பரிசோதனை, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

வகுப்பறைகள் அரிசி குடோனாக மாறியதால், வெளியே மரத்தடியில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதிலும் சில ஆசிரியர்கள் அரிசி வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனவே மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரிசி வினியோகம் செய்யும் பணியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

Similar News