உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன.
இதையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பாளர்கள் அதிகளவில் மனுதாக்கல் செய்தனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் வரும் போது அவர்களுடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று 83 பேரும், ஆரணி நகராட்சி 68 பேரும், திருவத்திபுரம் நகராட்சியில் 43 பேரும், வந்தவாசி நகராட்சியில் 70 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல செங்கம் பேரூராட்சியில் 68பேரும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 9 பேரும், தேசூர் பேரூராட்சியில் 24 பேரும், களம்பூர் பேரூராட்சியிர் 33 பேரும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 37 பேரும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 19 பேரும், பெரணமல்லூர் பேரூராட்சியில் 18 பேரும், போளூர் பேரூராட்சியில் 24 பேரும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 42 பேரும், வேட்டவலம் பேரூராட்சியில் 26 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
நேற்று ஒரேநாளில் மொத்தம் 564 பேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இதில் பெண் வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அதிக அளவு பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று காலை வேட்பு மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டன.