உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 6 பேரும் குற்றவாளிகள் புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 6 பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமச்சர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது.
இவர் 2014-ல் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, இணை அமைச்சராக பதவி வகித்தார். அதே ஆண்டு ஜனவரி 29-ந் தேதி அவரது வீட்டில், காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
பைப் வெடிகுண்டு வைத்த சம்பவத்தில் தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் என்ற குமார் சங்கர்முரளி (வயது36), தங்கராசு, தமிழரசன்(38), கவியரசன் என்ற ராஜா (29)காளிலிங்கம் என்ற காளை (37), கார்த்திக் என்ற ஆதிஜீவா (28) ஜான் மார்ட்டின் என்ற இளந்தனால் (23), ஆகிய பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் 85&க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதமும் முடிவடைந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையொட்டி குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரும் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். வீடியோ கான்பரன்சில் நடந்த வழக்கில் முதன்மை நீதிபதி செல்வநாதன், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களின் தண்டனை விபரம் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளது.