உள்ளூர் செய்திகள்
வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.

வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து கூட்டம்

Published On 2022-02-03 15:49 IST   |   Update On 2022-02-03 15:49:00 IST
ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தாலுக்கா, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் தலைமை தாங்கினார். 

ஊராட்சி மன்ற தலைவர் ராணிராஜகோபால் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்த விளக்கங்களை எடுத்து கூறினர். வேளாண்மை உதவி இயக்குநர் இந்த திட்டம் நடப்பாண்டு மயிலாடுதுறை வட்டாரத்தில் ஒன்பது கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தபட உள்ளது.

அந்த வகையில் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஊராட்சிமன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்வணிகத்துறை, கால்நடைபராமரிப்பு துறை ஆகிய துறைகளிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றிய விளக்கங்கள் கூறினர். மேலும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் உள்ள விவசாய குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு விவசாய குடும்பமும் பயன் பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம்.

இத்திட்டத்தில் தென்னங்கன்றுகள், மரக்கன்று வகைகள், வேளாண்மை உபகரணங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்கபடவுள்ளது. வேளாண்மை பொறியியல்துறை மூலம் பண்ணை கருவிகள், வாடகை இயந்திர நிலையம், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக செந்தில்குமார் இளநிலை பொறியாளர் தெரிவித்தார். 

வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறையில் இருந்து வருகை தந்த வேளாண்மை அலுவலர் கிருத்திகா கூறுகையில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்கும் மதிப்பு கூட்டி விற்பதற்க்கும் தேவையான நவீன யுக்திகளை கையாள இருப்பதாக கூறினார்கள். 

கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கால்நடை உதவி மருத்துவர் இரமாபிரபா விளக்கமாக எடுத்து கூறினர். இதனை தொடர்ந்து அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் உழவன் செயலி பயன்பாடு குறித்தும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினர்.

இதில், கிராம நிர்வாக அலுவலர் திருமலைபாண்டியன், கூட்டுறவு வங்கி செயலாளர் அருள், வேளாண்மை உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள். 

Similar News