உள்ளூர் செய்திகள்
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்த போது எடுத்த படம்.

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் விறுவிறுப்பாக நடந்த வியாபாரம்

Published On 2022-02-03 14:57 IST   |   Update On 2022-02-03 14:57:00 IST
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
ஈரோடு:

கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
 
கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை  தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்த வாரம் மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று நினைத்து நிலையில் மாறாக இன்று கூடிய சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வந்திருந்தனர். 

அவர்களுக்கு வசதியாக மாட்டுச்சந்தை வளாகத் திலேயே கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதில் மாட்டு வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டனர். 

இன்று கூடிய சந்தையில் 350 பசு மாடுகள், 250 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆகின. சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. 

அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News