உள்ளூர் செய்திகள்
தை அமாவாசையை முன்னிட்டு அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அமாவாசையை பவுர்ணமியாக்கிய ஐதீக விழா

Published On 2022-02-01 15:31 IST   |   Update On 2022-02-01 15:31:00 IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய ஐதீக விழா நடந்தது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் - அபிராமி கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளில் அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக நடைபெறுவது வழக்கம். 

தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் - அபிராமி கோவிலுக்கு வந்தார்.

அப்பொழுது மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார். இதனை கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தவர்களை இவர் யார் என்று கேட்டார். அப்பொழுது சுப்பிரமணிய பட்டரை பித்தன் என்று அருகில் இருந்தவர்கள் மன்னரிடம் கூறினர்.

அப்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டதற்கு, தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை அமாவாசையை பவுர்ணமி என்றார். இரவு பவுர்ணமி தோன்ற வேண்டும் அப்படி இல்லை என்றால் உன் தலையை எடுத்து விடுவேன் 
என்றார் மன்னர்.

உடனே சுப்பிரமணிய பட்டர் அபிராமியை நோக்கி அந்தாதிப் பாடல்களை பாட ஆரம்பித்தார். அப்போது 79-வது பாடலான Ôவிழிக்கே அருளுண்டு என்ற பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார்.

அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக தோன்ற காட்சியளித்தது. இந்த அதிசிய நிகழ்வுகளை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என அழைக்கப்பட்டார்.

இந்த சிறப்பு மிக்க தை அமாவாசை நாளான நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர்.

இதில் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பின்னர் அபிராமி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக ஆணைக் குளத்தரையில் அமைந்துள்ள எதிர்காளீஸ்வரர் கோவிலில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.

Similar News