உள்ளூர் செய்திகள்
நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

Published On 2022-01-31 20:04 IST   |   Update On 2022-01-31 20:04:00 IST
சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம், அயர்னபள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம், அயர்னபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 3,024 ஏக்கர் நிலத்தை சிப்காட் அமைப்பதற்காக அரசு எடுக்க முயற்சிக்கிறது. சூளகிரி, ஓசூர் பகுதிகளில் ஏற்கனவே சிப்காட் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாய நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களை அரசு எடுக்க முயல்வது குறித்து தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்கவே மக்கள் வந்துள்ளனர்.

அரசு நிலம் எடுப்பதற்கு முன்பு மக்கள் கருத்துக்களை கேட்க வேண்டும், சுற்றுச்சூழல் அறிக்கை, சமூகதாக்கம் அறிக்கை உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நேரடியாக நிலம் எடுக்கப்படுவது குறித்து பொது தகவல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கொளத்தூர் மணி தலைமையில் விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர்.

Similar News