உள்ளூர் செய்திகள்
தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
மதுரை
இன்று தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி கோவில்களுக்குச்சென்று வழிபட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும், தர்ப்பணம் செய்தவர் குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி, கடந்த 2 ஆண்டுகளாக நடக்கவில்லை. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
மதுரை யானைக்கல் பாலம், திருமலைராயர் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை மற்றும் திருப்பரங்குன்றம் சரவணபொய்கை உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி அதிகாலை முதல் தொடங்கியது.
இதற்காக அந்தந்த பகுதிகளில் புரோகிதர்கள் குவிந்தனர். பொதுமக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
வைகை ஆற்றுக்குள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்பிறகு இலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தனர்.
மதுரை மாநகரில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.