உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுதானியங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து ஊக்கப்படுத்த வேண்டும்

Published On 2022-01-31 15:01 IST   |   Update On 2022-01-31 15:01:00 IST
சிறுதானியங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன
சீர்காழி:

சீர்காழியை சேர்ந்த நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் ரா.சுதாகர், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, சின்னசோளம், பனிவரகு ஆகிய எட்டு தானிய வகைகள் மட்டுமே சிறுதானியங்களாகும்.

இதோடு சேர்த்து மரபு அரிசி இரகங்களான மாப்பிள்ளை சம்பா, போன்ற அரிசிகளையும் ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு முன்வரவேண்டும்.கடின உழைப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்களே அடிப்படையாகத் திகழ்ந்தன.

இடையில் பசுமைப் புரட்சி என்ற பகட்டு ஆர்ப்பாட்டத்தால் சிறுதானிய புழக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவே அனைவருக்குமான உணவாக அடையாளப் படுத்தப்பட்டது.

ஆகவே தான் உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரமின்றி பன்னோக்கு விவசாய அணுகுமுறையை மீட்டு எடுக்கவும் சிறுதானிய பயன்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரி வந்தனர். ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க அங்கன்வாடி, மதிய உணவுத்திட்டங்களில் சிறுதானிய உணவுகள் வழங்கிட வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்களை வழங்கிட வேண்டும். சிறுதானியங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்திட, மாவட்ட அளவில் சிறுதானியக் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கபட்டன.

ஆகவே, ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் முதலில் முன்னெடுத்தார்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நெல் மூட்டைகளை, அரசே கொள்முதல் செய்வதைப் போல சிறுதானியங்களையும் நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் ரசாயன உரங்களின் தேவையின்றி வளரக் கூடியவை சிறுதானியங்களை கொள்முதல் செய்வதற்கு முன்பு அதிலும் ஹைபிரிட் வகைகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால், அவற்றை முடிந்த வரை தவிர்த்து, நாட்டு வகைகளை கொள்முதல் செய்யவேண்டும்.

சிறுதானியங்கள் பொதுவாக நார்ச்சத்து அதிகமானவை. மலச்சிக்கலை தவிர்க்க உதவும். கேழ்வரகில் கால்சியம் அதிகம். கம்பு உடல் வெப்பம் தணித்து தெம்பு தரும். இரும்பு சத்து நிறைந்தது. தினை உடலுக்கு நல்ல பலம் தரும்.சிறுதானியங்களில் அனைத்திலும்புரதம், விட்டமின்கள், மினரல்கள் அதிகம். கார்போ ஹைட்ரேட்டும், பைட்டிரிக் அமிலமும் குறைவு. 

சாமை, குதிரைவாலி ஆகியவை எளிதில் ஜீரணமாகும். சத்து நிறைந்தவை.ஆகையால் தமிழ்நாடு முழுவதும் காலநிலைக்கேற்ப விவசாயிகளிடையே விழிப்புணர்வு செய்து சிறுதானியங்களையும் அதிகளவு பயிரிட அரசு ஊக்கபடுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News