31 சதவீத அகவிலை படி வழங்க கோரி ரேசன் கடை ஊழியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு
சிதம்பரம்:
தமிழக நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜன் சிதம்பரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு தொடர்பாக அரசாணை (நிலை) எண்.24 நாள் 22.2.21 அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு 14சதவீத அக விலைப்படி வழங்கப்படும் என்ற வாசகம் மட்டும்தான் உள்ளது. ஆகையால் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்கள் சுற்றறிக்கை ஏற்க இயலாது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் (மே. ஜீன், 2021) இடைநில்லா பயண செலவு தொகையும் ஊக்கத் தொகையும் வழங்க வில்லை இப்போது பொங்கல் ஊக்கத்தொகையும் வழங்கவில்லை.
இச்சூழ்நிலையில் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சுற்றறிக்கையில் பணியாளர் மத்தியில் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில் நிலவுகிறது.
உடனடியாக எங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 14 சதவீத அகவிலைப் படி வழங்க வேண்டும். மேலும் அரசாணை (நிலை) எண்.24 22.02.2021 அரசாணை வெளியிடப்படும்போது அரசு பணியாளர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படியாக இருந்தது.
ஆனால் புதிய அரசாணையில் 14 சதவீத மட்டுமே அக விலைப்படியாக வழங்க வேண்டும் என்று உள்ளதால். ஆகையால் விடுபட்ட 3 சதவீத அகவிலைப்படி சேர்த்து மொத்தம் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆகையால் இப்போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு 31.01.2022 அன்று 31 சதவீத அகவிலைப்படி வழங்க செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.