உள்ளூர் செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி ரெயில் மோதி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற விவசாயி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது55). விவசாயி.
இவர் எட்டிப் பட்டியில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எட்டிப்பட்டி அருகேயுள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ராஜி மீது மோதியது. ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.