காஞ்சிபுரம் மாநகராட்சியில் காங்கிரசுக்கு 4 வார்டுகள் தி.மு.க. ஒதுக்கியது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க.வில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுராந்தகம் நகராட்சி, உத்திரமேரூர், இடையன்குழி, வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் அடங்கி உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.முக., தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் தி.மு.க. மாவட்ட செயலாளரான க.சுந்தரை சந்தித்து ஏற்கனவே பட்டியல் கொடுத்து இருந்தனர்.
இதில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்ய உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 வார்டுகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் எந்தெந்த கட்சிக்கு எத்தனை வார்டு என்பது முடிவாகும். அதற்கு முன்பாக எதுவும் கூற இயலாது’ என்று தெரிவித்தார்.