உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

விருத்தாசலத்தில் 2 கடைகளில் தீ விபத்து- ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2022-01-29 15:51 IST   |   Update On 2022-01-29 15:51:00 IST
விருத்தாசலத்தில் 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் கருகியது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவர் பாலக்கரை பகுதியில் செல்போன் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு ராஜேஷ் குமார் வியாபாரம் முடிந்தவுடன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து இன்று அதிகாலை ராஜேஷ் குமாரின் 2 கடைகளிலும் இருந்து கரும்புகை வந்துள்ளது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கடைகளிலும் தீ மளமளவென பற்றி கொண்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் 2 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் 2 கடைகளிலும் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News