உள்ளூர் செய்திகள்
கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 424 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 424 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 424 பேருக்கு பாதிப்பு உறுதி யானது. இவர்களில் சென்னையில் இருந்து அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில் வந்த 2 பேருக்கும், திருச்சியில் இருந்து பரங்கிப்பேட்டை வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.
நோய் தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 136 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 285 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 66 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 483பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனாவுக்கு இது வரை 883 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முதியவர் ஒருவர் பலியானார். இது பற்றிய விவரம் வருமாறு:-
பரங்கிப்பேட்டையை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 889 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 396 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 24 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது.