உள்ளூர் செய்திகள்
ரேஷன் கடைக்கு கொண்டு வரப்பட்ட தரமற்ற அரிசி மூட்டைகள்
கொள்ளிடம் அருகே ரேசன் கடைக்கு தரமற்ற அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொண்ணங்காட்டுபடுகை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று இரவு 10 மணி அளவில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு ஒரு லாரி மூலம் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
அதனை லாரியில் இருந்து இறக்க முற்பட்டபோது, லாரியில் உள்ள அரிசி மூட்டைகள் தரமற்றதாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஊர்மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஒன்றுகூடி தரமற்ற அரிசியை ரேஷன் கடையில் இறக்கி மக்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்குவதை தடுத்து நிறுத்தினர்.
தரமான அரிசி வழங்க வழங்க வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும். உரிய அதிகாரிகள் இங்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி லாரியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுபோன்ற அரிசியை இந்த கிராமத்துக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து
லாரியில் கொண்டு வந்து அரிசியை திருப்பி எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கண்டனர்.
இந்நிலையில் இரவோடு இரவாக லாரி மூலம் கொண்டு வரப்பட்ட தரமற்ற அரிசி திருப்பி அனுப்பப்பட்டது.